fbpx

இராசகலை தமிழ் மக்களின் பாதுகாப்பை இ.தொ.கா உறுதி செய்யும் – ரூபன் பெருமாள்

பலாங்கொடை இராசகலை இல :01 பகுதியில் தமிழ் மற்றும் பெரும்பான்மை இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட சம்பவத்தினை தொடர்ந்து குறித்த பிரதேசத்தின் மக்கள் இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் அவர்களுக்கு தெரிவித்ததை தொடர்ந்து அவர் குறித்த தோட்டத்திற்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்துள்ளார்.

குறித்த சம்பவமானது இராசகலை நகரை அன்மித்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளதுடன், முதலில் தமிழ் இளைஞர்களே தாக்கப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம் பெற்றதுடன், இச்சம்பவத்தில் மூன்று தமிழ் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. தாக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் மற்றும் பெரும்பான்மையின இளைஞர்கள் பலாங்கொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து, இச்சம்பத்துடன் தொடர்புடைய தமிழ் இளைஞர்களை மாத்திரம் பொலிசார் கைது செய்துள்ளதுடன், இதுவரை எந்த ஒரு பெரும்பான்மை இனத்தவரும் கைது செய்யப்படவில்லை என பிரதேச மக்கள் ரூபன் பெருமாள் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

அதே வேலை, குறித்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு நகரத்திற்கு செல்ல முடியாத வண்ணம் அச்சுறுத்தல்களும் இருப்பதாக பிரதேசவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளதாகவும், இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் ரூபன் பெருமாள் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

குறித்த பிரதேச வாழ் தமிழ் மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நகரை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் குறித்த மக்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Back to top button