fbpx

கடனட்டை ஏன் ஆபத்தானது?

கடனட்டை ஏன் ஆபத்தானது?(Credit Card in Sri Lanka)

பணத்தை எப்படி கையாள்வது என்பது ஒரு வாழ்க்கையில் மிக முக்கியமான விடயமாகும். அன்றாட வாழ்க்கைக்கு தேவையான நிதியியல் முகாமைத்துவம் தொடர்பான விடயங்கள் சாதாரண மக்களுக்கு புரிய வைப்பதே எமது பதிவுகளின் நோக்கமாகும்.

அதில் முதல் பதிவாக பணத்தை சிறந்த முறையில் எவ்வாறு கையாளமுடியும் என பார்த்தோம். பணம் தொடர்பான விடயங்களில் பெரும்பாலானோர் சிக்கிகொள்வது வங்கிகளால் வழங்கப்படும் கடனட்டைகளால்(Credit Card in Sri Lanka) ஆகும். அதனை சூழவுள்ள ஆபத்தை அறியாமல் மக்கள் அவற்றை வாங்கி பயன்படுத்தி பின்னர் சிக்கலில் மாட்டி கொள்கின்றனர். இது மீளமுடியாத வலையாகவும் இருக்கும்.

கடனட்டைக்கான வட்டி வீதம் இலங்கையில் 32% வரை அதிகமாக காணப்படுகின்றது. எனவே கடனட்டை பற்றி முழுமையாக அறியாமல் அதனை வாங்குவது ஆபத்தானது.

இங்கு கடனட்டைக்கு விண்ணப்பிப்பதற்கு முன் கவனிக்கவேண்டிய 5 முக்கிய விடயங்கள் தரப்படுகின்றன. இவற்றை சரியான முறையில் பின்பற்றுமிடத்து உங்கள் வாழ்க்கையில் பணம் தொடர்பான நிர்வகித்தலில் நிச்சயமாக ஒரு மாற்றத்தை அவதானிக்கமுடியும்.

1.பட்ஜெட்டில் கடனட்டை

பொதுவாக வீட்டில் ஒவ்வொரு மாதத்திற்கும் செலவுகளுக்காக பட்ஜெட் தயாரிப்பது வழக்கம். அவ்வாறே கடனட்டையில் எவ்வளவு செலவு பண்ணவேண்டும் என அதில் உள்ளடக்கப்பட வேண்டும்.

அதிலும் கடனட்டையை குறித்த வகை செலவுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என நிர்ணயித்து கொள்ளுங்கள். அதாவது மாதாந்த கட்டணம் செலுத்துதல் அல்லது வீட்டுக்கு தேவையான மளிகை வாங்குவதற்கு மட்டும் பயன்படுத்துவதாக முடிவு செய்யுங்கள்.

பலர் கடனட்டையை பொழுதுபோக்கு செலவுகளுக்கு பயன்படுத்துவதால் அது எல்லை மீறி செலவழித்தலை தூண்டும். மாதாந்தகட்டணம் போன்றவற்றை செலுத்த கடனட்டை பயன்படுத்தினால் அது உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

2. கடனட்டையின் கடன் எல்லையை அதிகரிக்காதீர்கள்

கடன் எல்லையை அதிகரிப்பது தொடர்பாக வங்கியிலிருந்து தொலைபேசி அழைப்பு/ ஈமெயில் வரும். அவற்றை தவிர்த்து விடுதல் சிறந்தது.

கடன் எல்லையை எப்பொழுதும் நெருங்க கூடியளவு செலவு செய்யக்கூடாது. பொதுவாக நீங்கள்செலவு செய்த பணத்தை உரியகாலத்தில் செலுத்தி நிலுவையை 0 இல் வைத்திருக்க முயற்சி செய்யவேண்டும். அவ்வாறு முடியாவிடில் நிலுவை தொகை கடன் எல்லையில் அண்ணளவாக 30% வரை இருப்பதாக பார்த்துக்கொள்ளவும்.

எப்பொழுதும் நீங்கள் கடன் எல்லையை அண்மித்து செலவு செய்கிறீர்கள் என்றால், உடனடியாக கடனட்டையை இரத்து செய்து வெளியேறிவிடுவது நல்லது.

எமது Youtube சேனலை Subscribe செய்ய கீழே உள்ள Button ஐ அழுத்துங்கள்.

3. செலவு செய்த பணத்தை உரிய காலத்தில் மீள செலுத்தல்

பொதுவாக இந்த மாதம் செலவுசெய்த தொகை அண்ணளவாக அடுத்த மாதத்தினுள் செலுத்தப்படவேண்டும்.

ஒரு பொருளை கடனட்டை மூலம் வாங்கி அதற்கான செலவை வட்டியின்றி செலுத்தும் காலம் 50 நாட்கள் வரை இருக்கும். இந்த குறிப்பிட்ட காலத்தில் பணத்தை செலுத்தாவிடின் வட்டி வீதம் செயற்பட ஆரம்பிக்கும்.

எளிய உதாரணம்

உங்கள் கடனட்டை எல்லை Rs 100000 எனவும் நீங்கள் முழுத்தொகைக்கும் செலவு செய்துள்ளீர்கள் எனவும் வைத்துக்கொள்வோம்.

குறித்த காலத்தில்/அண்ணளவாக 1 மாதத்தில் Rs 100000ஐ நீங்கள் செலுத்தி இருந்தால் எந்த சிக்கலும் இல்லை.

உதாரணமாக நீங்கள் எந்த தொகையையும் குறித்தகாலம் வரை செலுத்தவில்லை எனின் சலுகைக்காலமுடிவில் வட்டிவீதம்தொழிற்பட ஆரம்பிக்கும்.

கடனட்டை வருட வட்டிவீதம் இலங்கையில் செயற்படும் வங்கிகளில் 32% வரை இருக்கும். இங்கு வருட வட்டிவீதம் 30% என எடுத்து கொள்வோம். எனவே மாத வட்டிவீதம் 2.5% (30 ஐ 12 ஆல் பிரித்தால் வருட வட்டி வீதத்தை மாத வட்டி வீதத்திற்கு மாற்றலாம்) ஆக இருக்கும்.

நீங்கள் செலுத்தாத மொத்த தொகை Rs 100000. இதற்கு மாதவட்டிவீதம் 2.5% மேலதிகமாக செலுத்தவேண்டும். இது Rs 2500(Rs 10000*2.5/100). எனவே ஒரு மாத முடிவில் நீங்கள் செலுத்த வேண்டிய மொத்த பணம் Rs 102500(Rs 100000+Rs 2500).

அத்துடன் நிலுவை Rs 100000 ஐ தாண்டியமையால் “Over Limit” கட்டணம் என குறித்த தொகையும் Due திகதி கடந்தமையால் அதற்கும் ஒருதொகை பணமும் மேலதிகமாக செலுத்தவேண்டும்.

இவ்வாறு நீங்கள் சிலமாதங்களுக்கு செலுத்தாவிடின் கூட்டுவட்டியும் செல்வாக்கு செலுத்தி உங்கள் நிலுவை நாளுக்கு நாள் வளரும்.

வங்கிகள் பொதுவாக உங்களின் முழு செலவு செய்த தொகையை செலுத்த உங்களை ஊக்குவிக்காது. நீங்கள் குறித்த காலத்துக்கு முழுத்தொகையையும் செலுத்தினால் வங்கிகள் எந்த இலாபமும் பெறமுடியாது.

எனவே வங்கிகள் “Minimum Payment” ஐ வாடிக்கையாளர் செலுத்துவதையே ஊக்குவிக்கும். Minimum Payment என்பது பொதுவாக நீங்கள் செலுத்தவேண்டியநிலுவை தொகையின் 2%- 5% ஆக இருக்கும்.

ஏற்கனவே கூறிய உதாரணப்படி நீங்கள் Rs 100000 கு செலவு செய்த போது வங்கி Minimum Payment ஆக அண்ணளவாக 2.5% ஐ செலுத்தக்கோருவதாக வைத்துக்கொள்வோம். இது வங்கியின் மாதாந்த வட்டிவீதத்திற்கு சமாகும். எனவே மாதாந்தம் நீங்கள் வட்டியே செலுத்துகின்றீர்கள். செலவு செய்த முழுத்தொகையான Rs. 100000 இன்னும் நிலுவையாகவே இருக்கும்.

மாதாமாதம் Minimum Payment செலுத்துவதால் தமக்கு பிரச்சினை இல்லை என பலர் தவறாக நினைக்கின்றனர். இந்த Minimum Payment எனும் மாயவலை தான் கடனட்டை மூலம் உங்களை சிக்கல்களில் தள்ளிவிடும்.

4.கடனட்டையை பயன்படுத்தி முற்பணம் எடுக்கக்கூடாது

கடனட்டையை பயன்படுத்தி முற்பணம் எடுப்பதை முழுமையாக தவிர்ப்பது நல்லது. மிக அவசரமான சூழ்நிலைகளை தவிர இந்த சலுகையை பயன்படுத்தக்கூடாது. முற்பணத்துக்கான வட்டிவீதம் இன்னமும் அதிகமாகவே இருக்கும்.

5.கடனட்டையை பாதுகாப்பாக வைத்திருத்தல்

கடனட்டையை பயன்படுத்தி அதிகளவு மோசடிகள் நடைபெற்றுவருகின்றன. கடனட்டை தொடர்பான CVV / OTP ஐ யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

கடனட்டையின் பின்பக்கத்திலுள்ள 3 இலக்க இரகசிய எண்ணை(CVV No) மனப்பாடம் செய்தபின்/ வேறு இடத்தில எழுதி வைத்துவிட்டு அதனை கடனட்டையில் அழித்துவிடுங்கள்.

cvv

ஒன்லைன் மூலம் பொருட்களை போது மிகக்கவனமாக கடனட்டையை கையாளவேண்டும்.

6.நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

A.ஏற்கனவே கடனட்டைபெற்று நீங்கள் கடன் எல்லைக்கு அண்மையாக நிலுவைத் தொகை எப்பொழுதும் இருக்குமாயின் உங்களுடைய முதல் வேலை கடனட்டையை இரத்து செய்வதாக இருக்கவேண்டும்.

B.புதிதாக கடனட்டை பெறுபவர்களுக்கு நிச்சயமான மாதச்சம்பளம்/ வருமானம் இருக்கவேண்டும்.

C.கடனட்டை நிலுவை எப்பொழுதும் 0 ஆக இருக்க வேண்டும் என நினைவில் வைத்திருங்கள். Minimum Payment செலுத்துதல் போதுமானதல்ல.

D.குறித்த காலத்தில் நிலுவைசெலுத்தாவிடின் வட்டி, Over Limit கட்டணம், Due கட்டணம் போன்றவையும் மேலதிகமாக செலுத்தவேண்டும் என அறிந்திருங்கள்.

E.கடனட்டையை கையாள்வது கடினம் என நினைத்தால் நீங்கள் அதற்கு விண்ணப்பிக்க வேண்டாம். எப்பொழுதும் Debit Card சிறந்தது.

பணம் தொடர்பாக வெளியிடப்பட்ட Docs Agency Blog பதிவுகளை படிக்க இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.

எங்களுடைய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவதற்கு கீழே உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்யுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜ்ர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    Back to top button