fbpx

சுதந்திரப் பறவையின் சுமை – ஒரு பக்க கதை

மெல்லிய காற்று மனதை வருட, இதமான மாலைப்பொழுதில் இயற்கையை இரசித்தவளாய் கடற்கரை மணலில் அமர்ந்தபடி இருந்தேன். அருகிலிருந்த தென்னைமர இடுக்குகளில் பறவைகளின் சலசலப்பு. அவற்றை பார்த்த போது, “எனக்கும் சிறகுகள் இருந்திருந்தால் ” என்ற பேராசை தோன்றியது.

“எனக்கும் சிறகுகள் இருந்திருந்தால் நானும் இந்த பறவைகள் போல் சுதந்திரமாக பறந்திருக்கலாமே, உலகம் சுற்றும் யுவதி நானாகியிருக்கலாமே, எந்த கவலையுமின்றி சுற்றித் திரிந்திருக்கலாமே, வானமே எல்லையென வாழ்ந்திருக்கலாமே” என்று என் கற்பனை கடலலை போல் அலைபாய ஆரம்பித்தது.

அப்போது என்னிடம் வந்த ஓர் குருவி சொன்னது, “எங்களைப் பார்த்து உனக்குள் இவ்வளவு ஆசையா? எங்கள் சிறகுகளைக் கண்டு அநேகமானோர் இப்படித் தான் ஆசைப்படுவர், ஆனால் ஒரு நாளின் ஆரம்பம் முதல் அன்றைய நாள் முடிவு வரை நாம் தினந்தினம் பல சவால்களுக்கு முகங்கொடுக்கின்றோம். உங்களைப் போலவே தான் எங்களுக்கும் உணவு, உறையுள் என அடிப்படை தேவைகள் உள்ளது.

அவற்றிற்காக அன்றாடம் நாம் உழைக்க வேண்டும், ஓய்வு என்பது எமக்குக் கிடையாது. மழை, வெயில், புயல் எது வந்தாலும் நாம் பறந்தே ஆகவேண்டும். நீங்கள் உங்கள் குடும்பங்களுக்காக உழைப்பது போலவே நாங்களும் எங்கள் குடும்பத்திற்காக உணவு தேடி உலாவ வேண்டும்.

அதிலும் எத்தனை விரோதிகள், அவர்களிடமிருந்து எங்கள் பிள்ளைகளை பாதுகாப்பதும் எமக்கு ஓர் சவால் தான். பல்வேறு பொறுப்புக்களும் கடமைகளும் எங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நோக்கியே எங்கள் சிறகுகள் பறந்துகொண்டிருக்கின்றன.” என்று சொல்லிவிட்டு விடைபெற்றது அந்தக் குருவி.

அப்போது தான் நானும் உணர்ந்துகொண்டேன், சுதந்திரப் பறவைகளுக்கும் சுமைகள் உண்டு என்பதினை. நாமும் இப்படி மற்றவர்களைப் பார்த்து, “அவர்களுக்கென்ன வசதியாக இருக்கின்றார்கள், சந்தோஷமாக இருக்கின்றார்கள், எந்த பிரச்சிணையும் இல்லாமல் இருக்கின்றார்கள்” என்று பெருமூச்சு விடுவதுண்டு.

அவரவர் வாழ்க்கை அவரவருக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்களின் வாழ்க்கை சிறகினைப் பார்த்து ஏங்கிக் கொண்டு இருப்பதைவிட, நாம் சொந்தக்காலில் நிற்க முயலுவது எம் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்தவளாய் கரை நோக்கி தடம் பதித்தேன்.

இந்த படைப்பை உருவாக்கியவர் சங்கீதா அன்டனி குமார். இவர் தொடர்ச்சியாக எழுத்துத்துறையில் தனது இருப்பை நிலை நாட்டிவருகின்ற இளம் எழுத்தாளராவர். இவரை பற்றிய மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள எம்மை தொடர்பு கொள்ளுங்கள்

மேலும் உங்களின் பதிவுகளும் எமது இணையத்தளத்தில் இடம் பெறவேண்டும் என விரும்பினால் இந்த தகவலை படியுங்கள்.

எங்களுடைய பதிவுகளை SMS இல் பெறுவதற்கு கீழே உங்கள் தொலைபேசி இலக்கத்தை பதிவுசெய்யுங்கள்

    எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

    எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்

    இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

    Back to top button