fbpx

முல்லைத்தீவில் மாணவிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில்,விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் 21.07.2022 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெறவும், மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள்
சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் மாணவிகள் சிலர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு இரண்டு புதிய வழக்குகள் 30.06.2022 நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பொலிஸாரினால் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு, சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களில் தொடரப்பட்ட வழக்கு ஆகியன முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் சட்டத்தரணி எஸ் தனஞ்சயன் முன்னிலையாகிய நிலையில்,வழக்கு விசாரணைகளின் பின்னர் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Back to top button