
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெரும்தொகை மோசடி
மட்டக்களப்பில் கனடா மற்றும் ஒமான் நாட்டிற்கு அனுப்புவதாக தெரிவித்து இருவரிடம் 28 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி கொழும்பு மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த இரு போலி முகவர்களை நேற்று (17) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.
கனடாவிற்கு அனுப்புவதாக கொழும்பிலுள்ள போலி முகவர் ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரிடம் 15 லட்சம் பெற்றுக் கொண்டு அவரை கடந்த 6 மாத காலமாக ஏமாற்றி மோசடி செய்து வந்துள்ளார்.
இந் நிலையில் பாதிக்கப்பட்டவர் போலி முகவருக்கு எதிராக விசேட குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்ததையடுத்து போலி முகவரை கொழும்பில் வைத்து நேற்றைய தினம் (18) கைது செய்தனர்.
அதேவேளை ஓமான் நாட்டிற்கு வேலை பெற்று தருவதாக ஒருவரிடம் சின்ன ஊறணியைச் சேர்ந்த போலி முகவர் ஒருவர் 13 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வந்துள்ளார்.
அந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய போலி முகவரை கைது செய்தனர். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் இன்று (18) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது இருவரும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்பதாக தெரிவித்த நிலையில் அவர்களை ஒருவருக்கு இரு ஆள் பிணையில் நிபந்தனை பிணையில் நீதவான் விடுவித்துள்ளார்.